உத்தரபிரதேசத்தில் இளம் பெண் சுட்டுக்கொலை
இளம்பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை, பொலிஸார் சுட்டுக் கொலை என்று பல்வேறு சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகளில் உத்தரபிரதேச மாநில அரசு சிக்கித் தவிக்கின்றது.
இந்த நிலையில் உ.பி. மாநிலம் சபப்பூர் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கிராமத்தில் இளம் பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது போது அந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.
பொலிஸார் விசாரணையில் 17 வயது நிரம்பிய அந்த பெண் கடந்த 14 ம் திகதி வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டதாக முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்ததும், அந்த இளம்பெண்ணின் 3 சகோதரர்களும் தேடி வந்தனர் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த பெண் கிராமத்துக்கு திரும்பினார். இதை அறிந்த 3 சகோதரர்களும், வாலிபருடன் இளம்பெண் ஓடியதால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டதாக கூறி அவளை சுட்டுக் கொன்றுவிட்டு பிணத்தை எரித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து பொலிஸார் அந்த சகோதரர்களின் வீட்டுக்கு சென்றனர். அதற்குள் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருமாறு அந்த மாநில பா. ஜ க கோரியிருந்த நிலையில் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநில அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கி உள்ளது.
Average Rating