சுவிஸ் வங்கியில் இந்தியர் பணம் ரூ.14,000 கோடி ஆனது..
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கறுப்பு பணம் பதுக்கலுக்கு பெயர்போனது சுவிஸ் வங்கி.
இங்கு, இந்தியர்களும் பல ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அளிக்க வேண்டுமென மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதே போல, பல்வேறு நாடுகளும் அயல்நாட்டவர்களின் ரகசிய கணக்கு விவரங்களை சுவிஸ் வங்கியிடம் கேட்டு வருகின்றன.
இந்நிலையில், 2013ம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதில், இந்தியர்களின் பணம் கடந்தாண்டை விட 40 சதவீதம் உயர்ந்து ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாறாக சுவிஸ் வங்கியில் மற்ற நாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் தொகை இதே காலக் கட்டத்தில் சுமார் 90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. 2012ம் ஆண்டு சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை பெருமளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கியின் பொறுப்புகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை என்று குறிப்பிட்டுள்ள இந்தத் தொகையில் கறுப்புப் பணம் கணக்கில் வராது என்று தெரிகிறது. மேலும் சுவிஸ் வங்கியில் அயல்நாட்டிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அடங்காது என்றும் கூறப்படுகிறது.
Average Rating