தென்கொரியாவில் 5 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வீரர் மன்னிப்பு கேட்டார்
தென்கொரிய ராணுவ முகாமில் தன்னுடன் தங்கியிருந்த 5 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற வீரர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
22 வயதான லிம் தான் செய்த குற்றத்திற்காக தனது குடும்பத்தினரிடமும், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது நடத்தை வருத்தம் அளிக்கும் செயல் என்று கூறியுள்ள அந்த வீரர், மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கடிதம் எழுதியுள்ளார்.
வடகொரிய எல்லையில் உள்ள முகாமில் கடந்த சனிக்கிழமை ராணுவ பயிற்சி முடிந்து முகாமிற்கு திரும்பியதும், லிம் சக வீரர்கள் மீது வெடிகுண்டை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
7 பேர் காயம் அடைந்தனர். பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். உயிருக்கு போராடிய அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் இருந்து குண்டு அகற்றப்பட்டுவிட்டதால் அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லிம் இவ்வாறு தாக்குதல் நடத்தியதன் பின்னணி பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், சக வீரர்களின் கொடுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னரும் பலமுறை நடந்துள்ளது. எனவே, ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் வலுவான விவாதம் நடைபெற்று வருகிறது.
வட கொரியாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வரும் தென்கொரியாவில் ராணுவத்தற்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் ராணுவப் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating