ஹட்டனில் மண்சரிவு : 4 வயது சிறுமி பலி
ஹட்டன்- டிம்புள்ள வீதியில் வெள்ளக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வியாபார நிலையமொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் நான்கு கடைகள் பகுதியளவில் சேமதடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் மக்கள் வங்கிக்கும் கார்கில்ஸ் புட் சிட்டிக்கும் இடையில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக மண் வெட்டப்பட்டிருந்த பகுதியே இவ்வாறு சரிந்துள்ளது.
இச்சம்பவத்தில், சந்திரசேகரன் சுஜிதா என்ற நான்கு வயது சிறுமியே பலியாகியுள்ளனர். மேலும் மனேகரன் ருக்சி என்ற 8 வயதான சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் டிக்கோயா ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி இடத்தில் மண் வெட்டுவதை நிறுத்தி வெட்டப்பட்ட பகுதியில் மழை நீர் வழிந்து ஓடாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும்படி பலமுறை நகரசபையால் சம்பந்தப்பட்டவருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டபோதும் அவர் அதனை அலட்சியம் செய்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தக்குமார் தெரிவித்தார்.
மேலும் அனுமதி பெறாத நிலையில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டதானால் இந்த கட்டிட நிர்மாணத்தை உடனடியாக நிறுத்தும்படியம் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றும்படியும் நகரசபையால் பல முறை இவருக்கு அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், இந்த பகுதியில் உள்ள 6 கடைகளை தற்காலிகமாக மூடி விடும்படி நகர சபையால் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating