அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களிடம் பணம் வசூலித்த ஊழியர் சஸ்பெண்டு!!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்ததுடன் 6 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூலில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது.
மேலும் ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவிக்கும் ஆண் குழந்தைகளுக்கு ரூ.1000, பெண் குழந்தைகளுக்கு ரூ.500 என பெற்றோர்களிடம் வசூல் செய்வதாகவும் தெரிகிறது.
இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. எனினும் அரசு மருத்துவனை ஊழியர்கள் வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டார்.
அப்போது மருத்துவமனை ஊழியர் மாரிமுத்து என்பவர் தங்களிடம் ரூ.50 வசூல் செய்ததாகவும், பிரசவித்த பெண்களிடம் பணம் வசூல் செய்வததையும் அமைச்சரிடம் கூறினர். இதையடுத்து புகார் கூறப்பட்ட மாரிமுத்துவை உடனடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் புகாரில் சிக்கிய ஊழியர்கள் 6 பேரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating