ஆரணி அருகே மாணவி கொலையில் மர்மம் நீடிப்பு!!
ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்–2 மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது.
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கலைச் செல்வி (வயது 17) ஆரணியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மணிவண்ணன் வெளியில் சென்று விட்டார். அவருடைய மனைவி ஜெயந்தியும் நிலத்துக்கு சென்றார். அப்போது மகள் கலைச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
நிலத்துக்கு சென்ற ஜெயந்தி ஒரு மணிநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது மகள் கலைச்செல்வி குளியல் அறையில் தீயில் உடல்கருகிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி கூச்சல் போட்டார்.
அதைகேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்று பார்த்து கலைச்செல்வியை மீட்டு முதலில் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயந்தியிடம், அவருடைய தந்தை மணிவண்ணன் நடந்தது குறித்து கேட்டபோது 2 நபர்கள் வீட்டுக்குவந்து தனது வாயில் துணியை வைத்து அமுக்கி மண்எண்ணையை ஊற்றி தீவைத்து விட்டு ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் மணிவண்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வி மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து எரித்து கொன்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் இரும்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் மாணவி சாவில் மர்மம் நீடிக்கிறது.
Average Rating