தண்டனைக்கான வயது 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு!!
தற்சமயம் 18 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்கள் என சட்டம் சொல்கிறது. இதனால் 18 வயது வரை உள்ளவர்கள் கொடுங்குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவது இல்லை. மாறாக சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அதேபோல அவர்கள் மீது வழக்கமான கோர்ட்டுகளில் விசாரணை நடைபெறாது. அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையும் பெரியவர்களைவிட மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உதாரணத்துக்கு டெல்லியில் ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் 6 பேரில் ஒருவர் சிறுவன். இதன் காரணமாக மற்றவர்கள் மீது சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தி தூக்கு தண்டனை வழங்கியது. அதேசமயம் சிறுவனுக்கு சிறுவர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதுபோன்ற குளறுபடிகளை சரிசெய்வதற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தியது. இதற்காக சிறுவர் நீதி சட்டத்தில் மாற்றம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிறுவர் சட்டத்தை மேலும் கடுமையாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அமைச்சரகங்களுக்குள் நடந்த ஆலோசனையின் முடிவில் சிறுவர் என்பதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் ஒரு இறுதி வரைவு சட்ட திருத்தத்தை தயாரித்து அமைச்சரவை செயலகத்துக்கு அனுப்பியுள்ளது. இதற்கு சட்ட அமைச்சகமும் ஒப்புதல் வழங்கிவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த சட்டதிருத்தத்தை அறிமுகப்படுத்தவும் நரேந்திர மோடியின் அரசு முயற்சி செய்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating