மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!
மதுரை கீரைத்துறை, மூலக்கரை பகுதியில் மின்மயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிக்க தனியார் டிரஸ்ட் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதன் தலைவராக ராமபாரதி என்பவர் உள்ளார்.
மூலக்கரை மின் மயானத்தில் ஒரு பிணத்தை எரிக்க ரூ.1350 வசூல் செய்யப்பட்டது. கடந்த 2013–14–ம் ஆண்டில் மட்டும் இங்கு 3300 உடல்கள் எரிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் கிடைத்து உள்ளது. இதில் ரூ. 14 லட்சத்து 40 ஆயிரத்தை மட்டும் டிரஸ்டின் தலைவர் ராமபாரதி மற்றும் சில நிர்வாகிகள் டிரஸ்டியில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் டிரஸ்டின் செயலாளர் மதன் கணக்கை சரிபார்த்தபோது தலைவர் ராமபாரதி, நிர்வாகி சிவா உள்பட 4 பேர் பிணம் எரித்து கிடைத்த வசூலில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் செயலாளர் மதன் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.30 லட்சம் மோசடி செய்த ராமபாரதி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating