லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு!!
பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் லிப்டில் சென்றபோது, தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 27 வயதான பெண் ஒருவர், எச்.எஸ்.ஆர் லே அவுட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் கடந்த ஜூலை 30ந் தேதி தானும், தனது அலுவலகத்தின் சி.இ.ஓ.வான ஜனார்தன் குப்தாவும் உணவருந்த சென்றதாக கூறியுள்ளார். உணவருந்தி விட்டு திரும்பும்போது ஒட்டலில் உள்ள லிப்டில் வந்தபோது தன்னை அவர் முத்தமிட முயன்றதாகவும், முறைகேடான முறையில் தன்னை தொட முயன்றதாகவும் புகார் அளித்துள்ளார்.
அப்பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட பெங்களூர் தென்கிழக்கு காவல் இணை ஆணையரான ரோகினி கட்டோச் செபாட், குப்தா மீது இரு வழக்குகளை பதிவு செய்தார். மேலும் காவல் ஆய்வாளர் ஒருவரை இப்புகார் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார். போலீசார் வழக்குப் பதிவு செயதிருந்தாலும் இதுவரை குப்தாவை கைது செய்யவில்லை.
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் தனது அலுவலகத்தின் மனித வள அதிகாரியிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால் தனது புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் அலுவலகம் எடுக்காததால் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக அப்பெண் தெரிவித்தார்.
Average Rating