வலிப்பு நோய்க்கு மந்திரவாதியிடம் சிகிச்சை: கர்ப்பிணி பெண் சாவு!!
கேரள மாநிலம் பொன்னாணியை அடுத்த தையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகள் பர்ஷானா, (வயது 20). இவருக்கும் மாராஞ்சேரியை சேர்ந்த நிஷார் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு பர்ஷானா கர்ப்பம் ஆனார். அவர், 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் நிஷார் வீட்டுக்கு வந்த உறவினர்கள் சிலர் பர்ஷானாவுக்கு ‘பேய்’ பிடித்திருக்கலாம் என கூறினர். இதற்கு தீர்வு காண அருகில் உள்ள மந்திரவாதியை பார்க்கும்படியும் அதற்கான ஏற்பாடுகளை உடனே மேற் கொள்ளும்படியும் நிஷாரிடம் கூறினர்.
அவரும், மனைவியை அழைத்துக் கொண்டு மந்திரவாதியை பார்க்கச் சென்றார். அங்கு அவருக்கு மாந்திரீக சிகிச்சைக்கள் அளிக்கப்பட்டது. இதில் நோய் குணமாக வில்லை. மாறாக பர்ஷானா அபாய கட்டத்திற்கு சென்றார்.
அப்போது தான் பர்ஷானாவின் பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்தது. அவர்கள் பர்ஷானாவை மந்திரவாதியின் பிடியில் இருந்து மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பர்ஷானா 14 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி பர்ஷானாவின் உறவினர்கள் கூறும்போது, பர்ஷானாவை நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. மந்திரவாதிகளிடம் அழைத்துச்சென்று அவரது உயிரை கணவன் வீட்டார் காவு வாங்கி விட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating