சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை: பெண் கைது!!
சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கருணை இல்ல நிர்வாகி – பெண் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சேலம் இரும்பாலை மெயின் கேட் அருகே வசிப்பவர் அசோகன். இவரது மனைவி ஜெயசீலி (30). இவர்களது 9 மாத பெண் குழந்தை அனுஷாவை காணவில்லை என்று இரும்பாலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜெயசீலியிடம் விசாரித்த போது அவருக்கும், அரூர் அருகே உள்ள மோட்டுப் பட்டியை சேர்ந்த சகாதேவன் என்பவரது மனைவி பழனியம்மாள் என்கிற சுமதி (35). என்பவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்னர். அப்போது குழந்தையை சுமதி கடத்தியதை ஒப்புகொண்டார். மேலும் இதற்கு ஏற்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் 2 வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த குழந்தையை நாகர் கோவில் பகுதியில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகவும் அதற்கு தனக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷன் கொடுத்ததாகவும் கூறினார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் நாகர்கோவில் விரைந்து சென்று குழந்தையை மீட்டு சேலம் கொண்டு வந்தனர். மேலும் சுமதியை கைது செய்தனர். மேலும் ஏற்காட்டை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் 2 வாலிபர்களை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–
குழந்தையின் தாய் ஜெயசீலி, சுமதி ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சுமதி குழந்தையை கடத்தி கொண்டு நாகர் கோவில் பகுதிக்கு சென்று இருக்கிறார். அங்கு தேவி என்ற பெண் மூலம் அந்த குழந்தையை கருணை இல்லம் நடத்தி வரும் ஜான்சி என்ற பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து உள்ளனர்.
ஜான்சியிடம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஷிபா என்ற பெண் தனக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. எனவே ஏதாவது குழந்தை கிடைத்தால் கொடுங்கள் என்று கூறி தனது செல்போன் எண்ணை கொடுத்து சென்று இருக்கிறார்.
இதையடுத்து ஷிபாவை தொடர்பு கொண்டு குழந்தையை கொடுத்து உள்ளனர். இதற்கான பணத்தை பெற்று அதில் ரூ. 5 ஆயிரத்தை சுமதிக்கு கமிஷனாக கொடுத்தனர். இதையடுத்தே குழந்தை மீட்கப்பட்டு சுமதி கைது செய்யப்பட்டார்.
மேலும் தேவி தற்போது 3½ வயது குழந்தையை வளர்த்து வருகிறார். ஜான்சி கருணை இல்லம் நடத்தி வருகிறார் எனவே அவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பெண் குழந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. குழந்தையை தாய் ஜெயசீலி கவனித்து வருகிறார்.
Average Rating