16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கோலிக்கு தூக்கு!!
டெல்லியை அடுத்த நொய்டாவில் நிதாரி என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் வீட்டில் சுரீந்தர் கோலி என்பவன் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான்.
இந்தப் பகுதியில் கடந்த 2005–2006–ம் ஆண்டுகளில் அடிக்கடி சிறுமிகள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக சுரீந்தர் கோலி மீது அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கோலி பணி புரிந்த வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது அங்கு சிறுமிகளின் மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் சிக்கின. தண்ணீர் தொட்டியிலும், கால்வாய்களிலும் சிறுமிகளின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன.
சிறுமிகளை கோலியின் முதலாளி மொனிந்தர்சிங் பாந்தர் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும், பின்னர் அவர்களை கோலி பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதும் தெரிய வந்தது.
மொத்தம் 16 சிறுமிகள் கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மொனிந்தர் சிங் பாந்தர், சுரீந்தர் கோலி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மொத்தம் 16 கொலை வழக்குகளில் 5 வழக்கில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த 5 வழக்கில் சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவனது முதலாளி மொனிந்தர்சிங் பாந்தர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். கோலியின் தூக்கு தண்டனையை அலகாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து சுரீந்தர் கோலியை வருகிற செப்டம்பர் 12–ந் திகதி தூக்கில் போடுமாறு காசியாபாத் கூடுதல் செசன்ஸ் நீதிபதி அதுல்குமார் குப்தா உத்தர விட்டுள்ளார்.
காசியாபாத் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கோலி தூக்கில் போடுவதற்காக மீரட் ஜெயிலுக்கு மாற்றப்பட்டான். அவனை தூக்கில் போடுவதற்கான கோர்ட்டு உத்தரவு மீரட் ஜெயில் சூப்பிரண்டு ரிஸ்விக்கு நேற்று கிடைத்தது. அவர் கூறுகையில், சட்ட விதிகள், ஜெயில் நடை முறைகள் படி கோலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இதற்கான ஏற்பாடுகள் மீரட் ஜெயிலில் நடந்து வருவதாக தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் தூக்கில் போடப்படும் முதலாவது கொலை கைதி சுரீந்தர்சிங் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
அவனது கருணை மனுவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘‘இது போன்ற கொலையாளிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது’’ என்று குறிப்பிட்டார். பதவி ஏற்ற ஒரு மாதத்தில் அவர் கருணை மனு மீது முடிவு எடுத்துள்ளார்.
Average Rating