புலிகளின் விமானத்தளத்தின் பிரதான பகுதிகள் விமானத் தாக்குதலினால் அழிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பிரதேசமாகிய கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் புலிகள் இயக்கத்தினரின் முக்கிய நிலையங்கள் என அரச விமானப் படையினரால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடந்த 16 ஆம் திகதி காலை கிபீர் விமானங்கள் மூலம் விமானப் படையினர் நடத்திய கடுமையான விமானத் தாக்குதல்களில் புலிகள் அமைப்பினரால் இரணைமடு பகுதியில் சட்டவிரோதமாக அமைத்திருந்த விமானத்தளம் மற்றும் விமான ஓடுபாதையின் முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தரப்பின் இராணுவ ஊடக அறிவிப்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ; தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இரணைமடுவிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானத்தளம் மற்றும் விமான ஓடுபாதைக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களைக் காட்டும் விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் பாதுகாப்புத் துறையினருக்குக் கிடைத்துள்ளதாக இராணுவ ஊடக அறிவிப்பாளர் மேலும் கூறியுள்ளார். கடந்த 15 ஆம் திகதி கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மறுநாள் 16 ஆம் திகதி காலை விமானப் படையினர் முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமலை பிரதேசங்களிலுள்ள புலிகள் அமைப்பின் முக்கிய நிலையங்களை இலக்கு வைத்து கிபீர் மற்றும் தாக்குதல் விமானங்கள் மூலம் தீவிரமான தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர்.
இந்த விமானத் தாக்குதல்கள் பற்றிய இராணுவ ஊடக அறிவிப்பாளரிடம் “லங்காதீப” தரப்பில் விசாரிக்கப்பட்ட போதே அவர் மேற்படி தகவல்களைத் தெரிவித்ததுடன் அந்தத் தாக்குதல்களால் விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானத்தளம் உட்பட முக்கிய நிலையங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பாரிய சேதங்களுக்குள்ளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் 16 ஆம் திகதி விமானப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது ஐந்து புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் அமைப்பின் இணையத்தளம் 16 ஆம் திகதி அறிவித்துள்ளது பற்றியும் இராணுவ தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.