கோடியக்காட்டில் குரங்குகள் தொல்லை மாணவர்கள் அவதி!!
வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி, முயல், குரங்குகள் ஏராளமாக உள்ளன. இதைத் தொடர்ந்து வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு வண்டுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சரபோஜிராஜபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ. மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியைச் சுற்றிலும், கிராமத்தைச் சுற்றிலும் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன.
பள்ளியில் மாணவ, மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவும் போதும், பள்ளிக்கு சைக்கிளில் மாணவ, மாணவிகள் வரும் போதும் குரங்குகள் குறுக்கே ஓடுவதால் மாணவ, மாணவிகள் சைக்கிளிலிருந்து விழுந்து பாதிக்கப்படுகிறார்கள்.
பள்ளி மாணவர்கள் கை கழுவும் போது அவர்களை பிடித்து பிராண்டி விடுகிறது. பொதுமக்கள் வீட்டில் உள்ள உணவு பொருட்களையும் உள்ளே சென்று சேதப்படுத்தி விடுகிறது. குரங்குகள் இப்படி பல்வேறு தொல்லைகள் கொடுப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வண்டுவாஞ்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் குஞ்சாலிமரைக்காயர் மாவட்ட கலெக்டருக்கும், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்து மனுக்கள் அனுப்பியுள்ளார்.
Average Rating