எதிர்கட்சியை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பு – கபே குற்றச்சாட்டு!!
ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் மீது நேற்று (30) கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதன் பின் பெற்றோல் குண்டும் வீசப்பட்டதாகவும் கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென கபே இயக்கம் இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் தாக்குதல் அதிகரித்து வருவதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலபிட்டி அமைப்பாளர் ஆனந்த அளுத்கமகே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐதேக தேசிய அமைப்பாளர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரியெல்ல, பி,ஹெரிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருந்தனர்.
கறுப்பு நிற ஜீப் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளரான எச்பிபி.புஸ்பகுமார தெரிவித்தார்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தற்போது நாளாந்த செயலாக மாறியுள்ளதென கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு கோரப்பட்ட பின்னர் நிலைமை இன்னும் மோசமடையும் எனவும் அதனால் பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகள் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீர்த்தி தென்னகோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating