நவராத்திரி விழாவில் மோதல்: பீகார் மந்திரியை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி!!
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் தரசாண்டி கோவில் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாட்டம் காரணமாக அந்த கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பீகார் மாநில மந்திரி வினய் பீகாரி கலந்து கொண்டார்.
அதோடு மாவட்ட நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாட்டு கச்சேரி நடந்தது. மைக் கோளாறு காரணமாக அங்கு கூடி இருந்த ஏராளமான மக்களுக்கு கேட்கவில்லை. அதோடு உட்காருவதற்கு சரியான இட வசதி இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. மேடையை நோக்கி நாற்காலிகள், கற்களை வீசியது. இதில் ஒரு நாற்காலி போலீஸ் சூப்பிரண்டு மீது விழுந்தது.
மேலும் அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி மந்திரியை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்தது. இதில் மந்திரி வினய் அதிர்ஷ்டவசமாக தப்பினார். மேடை தீப்பற்றி எரிந்தது. அவரது அரசு வாகனத்தை அந்த கும்பல் தீவைத்து எரித்தது.
போலீசார் பாதுகாப்புடன் மந்திரியை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக குற்றவாளிகள் என்று கருதப்படும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் கலந்த பாட்டீல் பறிமுதல் செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating