கணவரின் சந்தேகம்: மனைவி மாயம்!!
திருவட்டாரை அடுத்த வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவரது மனைவி ராணி (38). இருவரது பெயரும் மாற்றப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குமார் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து அனுப்பிய பணத்தில் அவரது மனைவி ஊரில் சொந்தமாக ஒரு வீடும் சில இடங்களில் சொத்தும் வாங்கி உள்ளார். இதில் அவருக்கு பல லட்சம் கடன் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார். அவர் வந்தது தெரிந்ததும் கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.
இது குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவர் மனைவியிடம் தகராறு செய்தார். வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை ராணி யாருக்கு கொடுத்தார்? அதை என்ன செய்தார்? என கேட்டு வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது நடத்தையிலும் சந்தேகப்பட்டார்.
நேற்றும் இது போல அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் குழந்தைகள் இல்லை. அவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதனால் குமார் குடிபோதையில் வந்து மனைவியை தாக்கவும் செய்தார். அடி தாங்க முடியாமல் அவர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பின. அவர்கள் தாயாரை காணாது தவித்தனர். இதையடுத்து உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ராணியை தேடி வந்தனர்.
இதற்கிடையே, மனைவியை தாக்கிய கணவர் குமார், அவரது உறவினர்களிடம் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக போனில் தெரிவித்தார். இதைக்கேட்டதும் உறவினர்கள் அவரை போலீசாருடன் சென்று பார்த்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். மனைவி மாயமானது பற்றியும், அவர் எதுவும் கூறவில்லை. எனவே போதை தெளிந்ததும் இன்று அவரை போலீஸ் நிலையம் அழைத்து வரும்படியும், அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது. அதன்பிறகே மாயமான ராணி என்ன ஆனார்? என்பது தெரியவரும்.
Average Rating