காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட மானேஜர் மீது தாக்குதல்: 9 பேர் கைது!!
திருப்பூர் சேரன் காடு பாரதி நகரில் தனியார் கம்பெனி மானேஜராக உள்ளவர் சுதந்திரகுமார் (வயது 28). திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தனபால் காசாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்று அந்த வழியே பனியன் தொழிலாளிகளான வினித்குமார் (17), ராம்குமார் (19), முத்துப்பாண்டி (20), இப்ராகீம் ஷா (18), மனோஜ்குமார் (21) ஆகியோர் குடிபோதையில் கம்பெனி அருகே நடந்து சென்றனர். இதில் வினித்குமார் கம்பெனி காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்தார்.
இதைப்பார்த்த மானேஜர் சுதந்திரகுமாரும், காசாளர் தனபாலும் வெளியில் வந்தனர். கம்பெனி அருகே சிறுநீர் கழித்த வினித்குமாரிடம் கம்பெனி சுவற்றில் சிறுநீர் கழிக்கிறாயே, இங்கு வேலை செய்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுமே என்று தட்டிக்கேட்டார்.
இதில் போதைக் கும்பலுக்கும் மானேஜருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே வினித்குமார் தனது போன் மூலம் மேலும் தனது நண்பர்களை அழைத்தார்.
உடனே மணிமுத்து (21), சுந்தரபாண்டி (18), சிவப்பிரகாசம் (19), மணிகண்டன் (18) ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வந்ததும் வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த வினித்குமார் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மானேஜர் சுதந்திரகுமாரின் தலையில் அடித்தார். பீர் பாட்டில் உடைந்து சுதந்திரகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் குபுகுபுவென கொட்டியது. பீர்பாட்டில் சிதறல்கள் அடித்த வினித்குமார் கையில் பட்டு அவருக்கும் ரத்தம் கொட்டியது. தகராறை தடுக்க முயன்ற காசாளர் தனபாலுக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மானேஜரும், காசாளரும் அலறி சத்தம் போட்டனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை கண்ட 9 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 9 பேர் கும்பலை மடக்கிப்பிடித்தனர்.
படுகாயம் அடைந்த மானேஜர் சுதந்திரகுமார், தனபால் ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள சுதந்திரகுமாருக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயம் அடைந்த வினித்குமாரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வினித்குமார் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
Average Rating