திருப்பத்தூரில் நகை அடகு பிடித்து 400 பவுன் மோசடி: கணவன்–மனைவி மீது 50–க்கும் மேற்பட்டோர் புகார்!!
அறக்கட்டளை மூலம் நகை அடகு பிடித்து 400 பவுன் நகையை மோசடி செய்ததாக கணவன்–மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் மற்றும் 50 பேர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருப்பத்தூரை சேர்ந்த ராஜா–சுமதி தம்பதியர், அன்னை மீரா கிராமிய மகளிர் நல அறக்கட்டளையை நடத்தி வந்தனர். இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த வட்டியில் நகை அடகு பிடித்து கடன் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நகைகளை மோசடி செய்து விட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
சுமார் 400 பவுன் அடகு நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும்.
இந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating