மீனவர்கள் நலனில் இந்திய அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது!!
தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தனர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் அங்கு நிருபர்களுக்கு, போஸ் அளித்த பேட்டி வருமாறு:-
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பலரும் அவர்களின் மீன் பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படுகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 82 படகுகள் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 79 படகுகள் விசைப்படகுகளும், 3 நாட்டுப் படகுகளும் அடங்கும். 24 மீனவர்களும் அங்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகளில் தமிழக அரசு உடனுக்குடன் செயல்பட்டு, தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மீனவர்கள் நலனில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது.
ஆனால் தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எங்கள் நிலைமையை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மழைகாலம் தொடங்க உள்ளதால் மீன்பிடி படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
ஏனென்றால், அவை பராமரிக்கப்படாத நிலையில் முற்றிலும் சேதமடைந்துவிட வாய்ப்பு அதிகம். ஏற்கனவே பல படகுகள் சேதமடைந்துவிட்டன. மீன்பிடி படகுகள் இல்லாத நிலையில் எங்களுக்கு மாதந்தோறும் நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும்.
மாற்றுத் தொழிலைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்தப் பிரச்சினைகள் பற்றி அமைச்சர் ஜெயபாலிடம் மனு கொடுத்துள்ளோம். அதன்படி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள இலங்கைக்கான துணைத் தூதர் ஆகியோரையும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating