பாலக்காடு அருகே மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள பருத்திப்பள்ளி தெற்கு கரையைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் அந்த பகுதியில் கடிகாரம் ரிப்பேர் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.
குடிப்பழக்கம் உள்ள வேணுகோபால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சுமதியுடன் சண்டை போடுவார். ‘குடிக்காமல் குடும்பத்தை காப்பாற்றும் வழியைப்பாருங்கள்’ என்று சுமதி பலமுறை புத்திமதி கூறியும் வேணுகோபால் அதனை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கடையை பூட்டிய வேணுகோபால் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். மறுபடியும் சுமதியிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் இல்லை என்று சொல்லவே வேணுகோபால் ஆத்திரமடைந்ததார்.
வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து சுமதியின் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமதியை அக்கம் பக்கத்தவர்கள் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆலத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் பதுங்கியிருந்த வேணுகோபாலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Average Rating