அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு!!
கோட்டயம் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நெய்யாற்றின்கரை மற்றும் விதுரை மலை கிராமங்களில் இருந்து ஆதிவாசி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பஸ்சில் சென்றபோது அதே பஸ்சில் பயணம் செய்த அரசியல் பிரமுகர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அந்த சிறுமி விதுரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
எனவே அவர், இதுபற்றி கடந்த 16–ந்தேதி நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென சிறுமியின் உறவினர்களும், ஆதிவாசி அமைப்புகளும் குற்றம் சாட்டின. இது தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
ஆதிவாசி அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெய்யாற்றின்கரை போலீசார் அந்த சிறுமி படித்து வரும் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பில் இருந்த மாணவியை வெளியே அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதுபற்றி சிறுமி உறவினர்களிடம் கூறி அழுதார். பள்ளியில் பலர் முன்னிலையில் தன்னை போலீசார் வெளியே அழைத்து வந்து விசாரித்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதையறிந்த ஆதிவாசி அமைப்புகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று நெய்யாற்றின்கரை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. சைபுதீன் விரைந்து வந்தார். அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினார். போலீசார் தவறு செய்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடுவதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
Average Rating