கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்!!
கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பில் படித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த மாணவியை வழிமறித்த சிலர், அருகாமையில் இருக்கும் தோட்டத்தில் அந்த மாணவியை கடத்திச் சென்று, பலாத்காரம் செய்துவிட்டு, மயங்கிய நிலையில் கிடந்த அவளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
தோட்டத்தில் தங்களது மகள் அலங்கோலமான நிலையில் கிடப்பதாக அறியவந்த பெற்றோர் ஓடோடிச் சென்று, அவளை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, யாரோ 3 பேர் பள்ளிக்குச் செல்லும் வழியில் தன்னை வழிமறித்து, தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி குளிர்பானம் அளித்ததாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் கடந்த இரு நாட்களாக ஆஸ்பத்திரியில் சிக்கிச்சை பெற்றுவந்த அந்த மாணவி நேற்றிரவு மரணம் அடைந்தார்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்த்தஹள்ளி போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Average Rating