மீனவர்கள் விவகாரம் – தமிழகத்தில் தொடர்முழக்கப் போராட்டம்!!
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும், விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேலும் 9 மீனவர்களையும் மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் ஐவரும் அப்பாவிகள், அவர்களுக்கு அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற தமிழகத்தின் வாதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஐந்து மீனவர்களுக்கும் போதைப் பொருள் கடத்தலில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் நீதி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தண்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க சட்டரீதியாகவும், தூதரக ரீதியாகவும், இரு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அறிவித்திருப்பது ஓரளவு நிம்மதியளிக்கிறது.
ஆனால், இந்த நிம்மதியைக் குலைக்கும் வகையில், ‘‘இந்திய மீனவர்கள் ஐவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கையின் சட்டத்தை வளைக்க முடியாது. இந்தத் தீர்ப்பு குறித்து இந்தியா தெரிவித்துள்ள கருத்துக்கள் இலங்கை மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.
சட்டப்படி செயல்படுகிறோம் என்ற பெயரில், இந்தியாவைச் சீண்டிப்பார்ப்பதற்காக நீதிமன்றங்களின் உதவியுடன் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது இலங்கை ஆட்சியாளர்களின் வாடிக்கை ஆகிவிட்டது.
இத்தகைய சூழலில் வழக்கம்போலவே இலங்கை அரசுக்கு வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் விடுத்துக் கொண்டிருந்தால் அது இந்தியாவை எள்ளி நகையாடுவதற்குத் தான் உதவுமே தவிர, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒருபோதும் உதவாது.
தமிழக மீனவர்கள் ஐவருக்கு மரண தண்டனை விதித்த இலங்கை அரசைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வு மற்றும் பால்விலை உயர்வை கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் நவம்பர் 5ம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
மூன்று முக்கியப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
Average Rating