செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!
மேற்கு வங்காளம் மாநிலம், பெஹ்ரம்போர் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), டெண்ட்டுலியா உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
தன்னுடன் படிக்கும் சகமாணவர்களில் சிலர் ‘டச் ஸ்கிரீன்’ செல்போன்களை பயன்படுத்துவதைப் பார்த்து, ‘நாமும் இதைப்போன்றதொரு செல்போனை வாங்க வேண்டும்’ என்று ஆசைப்பட்ட மசுத், தனது ஆசையை தந்தையிடம் தெரிவித்தான்.
ஏற்கனவே, வீட்டில் இரண்டு சாதாரண ரக செல்போன்கள் இருக்கும் நிலையில், மகனுக்கு என்று தனியாக ‘டச் ஸ்கிரீன்’ செல்போனை வாங்கித்தர ஏழை விவசாயியான மபிபுல் சர்க்காரின் பொருளாதார வசதி இடமளிக்கவில்லை. இதனால், ’நமக்கு எதற்கு ஆடம்பர செல்போன் எல்லாம்..’ என்று கூறிய அவர், மகனின் ஆசையை நிராகரித்தார்.
இதனால், மனமுடைந்த மசுத், நேற்று முந்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டான். விபரம் அறிந்து பதறிப்போன பெற்றோர், வாயில் இருந்து நுரை வெளியேறிய நிலையில் கிடந்த அவனை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவன் உயிரிழந்தான்.
மசுத்தின் நினைவாக டெண்ட்டுலியா உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியர், ‘படிப்பில் படுசுட்டியாக இல்லாவிட்டாலும், மரியாதை மற்றும் நல்லொழுக்கத்தில் நல்ல மாணவனாக மசுத் திகழ்ந்தான்’ என்று குறிப்பிட்டார்.
Average Rating