முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு!!
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள முள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் பாரதியம்மாள் (வயது 90). இவர் சம்பத்தன்று வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்த 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பாரதியம்மாள் அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் பாரதியம்மாளிடம் ஒரு காகிதத்தை காண்பித்து அதில் உள்ள முகவரி குறித்து விசாரித்தார். அந்த முகவரியை பாரதியம்மாள் விளக்கி கூறிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த மற்றொரு வாலிபர் பாரதியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை அறுத்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரதியம்மாள் அவனிடமிருந்து நகையை மீட்க முயன்ற போது பாரதியம்மாள் காதில் அணிந்திருந்த கம்மலை காதோடு அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்கள்.
இதில் படுகாயமடைந்த பாரதியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating