காதல் தகராறில் 10–ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை: பள்ளி தோழர்கள் 2 பேர் கைது!!
கேரள மாநிலம் காசர் கோட்டை அடுத்த காஞ்சாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், மீனவர். இவரது மகன் அபிலாஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
அபிலாஷ் கடந்த 15–ந்தேதி பள்ளிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே மகனை காணவில்லை என சுரேஷ், காசர்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவன் அபிலாஷை தேடி வந்தனர்.
மேலும் அவரது பள்ளி தோழர்களிடமும் விசாரித்தனர். இதில் சம்பவத்தன்று அபிலாஷ், அவரது வகுப்பு தோழர்கள் 2 பேருடன் ஒரு ஆட்டோவில் சென்றது தெரிய வந்தது. போலீசார் அந்த 2 பேரையும் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, அபிலாசுக்கு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருடன் காதல் இருந்ததும், இதுபோல அவரது தோழரும் இன்னொரு மாணவியை காதலித்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது.
இந்த தகராறு காரணமாக அபிலாஷை பள்ளி தோழர்களே ஆட்டோவில் அழைத்துச் சென்று தலையில் அடித்து கொலை செய்து பிணத்தை குளத்தில் வீசியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 2 மாணவர்களையும் கைது செய்த போலீசார் குளத்தில் பிணமாக மிதந்த அபிலாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating