பெண் வக்கீலிடம் சில்மிஷம்: வாலிபரின் படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து தேடுதல் வேட்டை!!
பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 15 எப் மாநகர பேருந்தில் கடந்த 14–ந் தேதி பெண் வக்கீல் ஒருவரிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
கீழ்ப்பாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பெண் வக்கீலின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர் ஒருவர் அவரது உடலில் கை வைத்து தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கண்டக்டரிடம் புகார் செய்தும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பெண் வக்கீல் குற்றம் சாட்டியிருந்தார்.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சில்மிஷ ஆசாமியை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அந்த வாலிபர் சிக்கவில்லை.
இதனால் அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் பெண் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் பஸ்களில் தினமும் சுடிதார் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 பெண் போலீசார் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பெண் வக்கீல் கூறிய அங்க அடையாளங்களை வைத்து தப்பி ஓடிய வாலிபரின் படத்தை போலீசார் கம்ப்யூட்டரில் வரைந்துள்ளனர். அதனை வைத்தும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Average Rating