ராஜஸ்தானில் மீண்டும் கொடூரம்: மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலமாக வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து!!
ராஜஸ்தானில் உள்ள பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலம் வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்ற ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் நிகழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மூதாட்டியை குழந்தைகளை கொன்று திண்ணும் சூனியக்காரி என்று கூறிய கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள், அவருடைய ஆடைகளை களையவைத்து, முகத்தில் கருப்பு வர்ணத்தை ஊற்றி, நிர்வாணமாக கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பில்வாரா மாவட்டத்தில் உள்ள சவ்ஹனோக் கி கமேரி கிராமத்தில் கடந்த வாரம் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் அந்த மூதாட்டியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன், அவரிடம் யாராவது பேசினால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கட்டப்பஞ்சாயத்து உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது. 37 வருடத்துக்கு முன் கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகள் ஏதுமின்றி தனியாக வசித்து வரும் மூதாட்டிக்கு சொந்தமான சிறிய அளவிலான நிலத்தை அபகரிக்கும் நோக்கிலேயே இவ்வாறு கட்டப்பஞ்சாயத்து நடத்தி அவரை அவமானப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இது போன்று கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டாலும், அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் இன்னும் கட்டப்பஞ்சாயத்து நின்றபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating