இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நார்வேயில் முக்கிய ஆலோசனை
இலங்கையில் போர்நிறுத்தத்தைக் கண்காணித்து வந்த சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது முழு அளவிலான போராக உருவாகக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போர் நிறுத்தக் கண்காணிப்பைத் தொடருவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்துக்கு நார்வே ஏற்பாடு செய்திருந்தது. நார்வே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்த பின்லாந்து, சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தங்களது இயக்கத்துக்குத் தடை விதித்த இந்த 3 நாடுகளின் பிரதிநிதிகளும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்திருந்தனர்.