பாடாலூரில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் நடித்து நகை, பணம் கொள்ளை: 4 பேர் கைது!!
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ஜெயபிரகாஷ் (52). அவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடியில் தனது மனைவி நிர்மலா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகே ரைஸ் மில் உள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் உரம் மற்றும் பூச்சிமருந்து, சிமெண்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர 26–ம் தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி ஜெயபிரகாஷ் வீட்டில் படுக்கை அறை, பூஜை அறை, பீரோ ஆகியவற்றை சோதனையிட்டு வீட்டிலிருந்த 50 பவுன் தங்க நகை, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், ஐந்து கிலோ வெள்ளி என மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதல் சந்தேகமடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து பாடாலூர் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா சேத்துமடை அருகேயுள்ள ஓடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சந்தோஷ்குமார் (எ) சுரேஷ் (33), கஞ்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் துரை (34), மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சந்திரசேகர் (35), பல்லடம் தாலுகா தொட்டப்பட்டியை சேர்ந்த ராஜாமணி மகன் அருண் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பாடாலூரில் கொள்ளையடித்தது அவர்கள்தான் என தெரியவந்தது.
அதனையடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி கொள்ளையடித்த பணம், மற்றும் நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 கார்களையும் மீட்டனர். கைது செய்த 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating