எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திராவுக்கு 3–வது இடம்: ஆய்வில் தகவல்!!
எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் இந்தியாவில் 3–வது மற்றும் 4–வது இடத்தில் இருப்பது தெரிய வந்து உள்ளது.
எச்.ஐ.வி. கிருமி பாதிப்புக்குள்ளாகி கடந்த ஆண்டில் 600 பேர் இறந்து உள்ளனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் 5 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களில் 4.25 லட்சம் பேர்தான் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 9,591 பேர் ஆண்கள் என்றும் 1 லட்சத்து 93,134 பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. பெண்களில கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. நோய் கிருமி உள்ளது. இந்த வகையில் 12,719 சிறுவர்கள், 18,872 சிறுமிகள், இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 தெலுங்கு மாநிலங்களில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பல மருத்துவ மனையில் எய்ட்ஸ் தடுப்பு மருந்து கூட இல்லை.
மத்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாநிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.80 கோடி ஒதுக்குவதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு ரூ.30 கோடி தான் ஒதுக்கப்பட்டது. இந்த பணத்தை கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் செலவு செய்யாமல் இருப்பு வைத்து உள்ளனர். மாநில அரசு ஆய்வு செய்ததில் தெரிய வந்து உள்ளது. எச்.ஐ.வி. விழிப்புணர்வு அமைப்பாளர்கள் பலருக்கு மாத சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்வதில்லை.
இது போன்ற காரணங்களால் எச்.ஐ.வி. நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Average Rating