விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது இலங்கை கடற்படை தாக்குதல்
இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது. இலங்கையில் நேற்று இரவு 10 மணிக்குமேல் தொண்டமணறு என்ற இடத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் படகு புறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை என்ற இடத்தில் உள்ள இலங்கை கடற்படை தளம் நோக்கி அது சென்று கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், அந்த படகை பார்த்துவிட்டனர். படகை நிறுத்துமாறு கூறினர். ஆனால் படகு நிற்காமல் வேகமாக வந்தது. இதனால் அப்படகு மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது.
இத்தகவல்களை இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் தசநாயகே தெரிவித்தார். உயிர்ச்சேதம் பற்றிய விவரம் தெரியவில்லை என்று அவர் கூறினார். உளவு பார்க்கும் நோக்கத்தில் விடுதலைப்புலிகளின் படகு வந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.