உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய பல்செட்: டாக்டர்கள் அகற்றினர்!!
உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய ‘பல் செட்டை’ சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் அபூர்வ அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்தனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் கனவான் (65). இவர் குடலிறக்கம் அறுவை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 10–ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது உணவு சாப்பிட்டு தூங்கும் போது தவறுதலாக பல்செட்டை விழுங்கி விட்டார். உணவு குழாயில் ‘பல்செட்’ சிக்கிக் கொண்டது. இதனால் கடும் அவதிப்பட்டார். பல்செட்டை வெளியே எடுக்க டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் முடியவில்லை.
கடினமான சிகிச்சை என்பதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ பிரிவில் ஜனவரி 15–ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
‘என்டோஸ் கோப்பி’ பரிசோதனை செய்து பார்த்த போது உணவு குழாயில் பல்செட் சிக்கி இருந்தது. பல்செட்டில் இருந்த 2 ஊக்குகள் உணவு குழாயினை கிழித்து சேதம் ஏற்படுத்தி இருந்தது.
இதனால் டாக்டர்கள் உணவு குழாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன முறையில் ஆபரேசன் செய்து ‘பல்செட்’டை எடுக்க முடிவு செய்தனர்.
இரைப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் சந்திரமோகன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் முதியவருக்கு தொண்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் வெற்றிகரமாக ‘பல்செட்’டை வெளியே எடுத்தனர். உணவுக்குழாய் பாதிப்பையும் சரி செய்தனர். தற்போது முதியவர் நலமாக உள்ளார்.
இது குறித்து அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா கூறியதாவது:–
நீலாங்கரையை சேர்ந்த 65 வயது கனவான் என்பவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து பாதிப்பு இல்லாமல் ‘பல்செட்’ அகற்றியது பெரிய சாதனையாகும்.
விடுமுறை தினமான பொங்கல் தினத்திலும் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர் குழுவினரை பாராட்டுகிறேன். கடந்த 5 வருடமாக உணவு குழாயில் பொருட்கள் சிக்கி 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
44 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள், 19 நோயாளிகள் பல்செட் விழுங்கி உள்ளனர். உறங்கும் போதும், மது அருந்தும் போது பல் செட் தவறுதலாக விழுங்கி விடுகின்றனர். பல் செட்டில் ஊக்குகள் இருக்கும். இது தொண்டையை கிழித்து விடும். எனவே பொதுமக்கள், முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating