சேலம் அருகே மனைவியை கொன்று கணவர் தற்கொலை!!
சேலம் அருகே உள்ளது காக்காப்பாளையம். இங்குள்ள நடுவனேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(வயது 30). விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார், இவரது மனைவி சித்ரா (25). இவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார், இவர்களுக்கு தேசிங்கு (2) என்ற குழந்தை உள்ளது. சித்ரா தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
புஷ்பநாதன் நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரும், அவரது மனைவி, குழந்தை வீட்டில் தூங்கினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் வசிப்பவர்கள் புஷ்பநாதனின் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அவர்கள் இதுபற்றி அருகில் வசிக்கும் புஷ்பநாதனின் தந்தை சித்தனிடம் தெரிவித்தனர். உடனே அவரும் அங்கு வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு புஷ்பநாதன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவரது உடல் அருகில் சித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சித்ரா தலையில் கல்லால் தாக்கியதால் இறந்துள்ளார். அருகில் குழந்தை அழுது கொண்டிருந்தது. இந்த குழந்தையை உறவினர்கள் எடுத்து அழுகையை நிறுத்தினர்.
புஷ்பநாதன் தற்கொலை, சித்ரா கொலை குறித்து பொதுமக்கள் உடனே மகுடஞ்சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் 2 பிணங்களை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.
புஷ்பநாதன் தனது மனைவி சித்ராவை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவன், மனைவி சாவை அறிந்த திரளான பொதுமக்கள் சம்பவ இடம் வந்து பிணங்களை பார்த்து சென்றனர்.
இதுகுறித்து உறவினர்கள் சிலர் கூறும்போது,
புஷ்பநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி சித்ராவிடம் தகராறு செய்தார். இதனால் இவரை அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு புஷ்பநாதன், சித்ராவின் பெற்றோர் வசிக்கும் பனமரத்துப்பட்டி நல்லியாம்புதூருக்கு சென்று மாமனாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை அறிந்த சித்ரா, புஷ்பநாதனிடம் தகராறு செய்து இருக்கலாம். இதில் கோபம் அடைந்த புஷ்பநாதன் சித்ராவை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சித்ராவை , புஷ்பநாதன் கொலை செய்ததற்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் மகுடஞ்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating