12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட தம்பி: தந்தையின் அலட்சியத்தால் பலியான உயிர்!!
மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாலில் 12 வயது சிறுவன் தனது தம்பியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செர்சிப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு லுங்தார் கிராமத்தில் வசிப்பவர் லால்சுங்கிமா. வேட்டைக்காக காட்டுக்குச் சென்ற இவர் நேற்றிரவு வீடு திரும்பினார். குளிராக இருந்ததால் வீட்டில் நெருப்பின் அருகே அமர்ந்து குளிர் காய்ந்தார். பிறகு வெளியே சென்ற அவர் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட தனது வேட்டைத் துப்பாக்கியை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது இளைய மகன் ஜான் கென்னடி (8), அந்த துப்பாக்கியை எடுத்து தன் அண்ணன் டேவிட்டிடம்(12) காட்டி மிரட்டியுள்ளான். விவரம் புரியாத அந்த சிறுவனும் தன் தம்பியிடம் நெருங்கி வந்துள்ளான். அப்போது ஜான் தனது பொம்மைத் துப்பாக்கியை அழுத்துவது போலவே அந்த துப்பாக்கியின் விசையை அழுத்தியிருக்கிறான்.
வெடித்த துப்பாக்கிக் குண்டு அருகில் நின்ற டேவிட்டின் தலையில் துளைத்துச் சென்றது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே டேவிட் துடிதுடித்து பலியானான்.
தனது அலட்சியத்தால் மகன் பலியானதை உணர்ந்து குற்ற உணர்ச்சியால் சிறுவனின் தந்தை கதறி அழுத சம்பவம் கிராமத்தினரை கண்கலங்கச் செய்தது.
Average Rating