கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48).
இவரது மனைவி ஸ்ரீஜா (40). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் சொந்த ஊர் திரும்பி மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
சமீப காலமாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவர் மனைவியை அடித்து உதைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையும் சுரேசுக்கும், ஸ்ரீஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது துப்பாக்கியை எடுத்து வந்து மனைவி ஸ்ரீஜாவை சுட்டார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அவர்களை பார்த்ததும், சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேசை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக மனைவியை சுட்டுக்கொன்றார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating