கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா(வயது 19). இவர் தனது காதல் கணவருடன் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.
பின்னர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
நானும் எனது ஊரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும் காதலித்தோம்.
இருவரும் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் உறுதியாக இருந்தோம். எனவே வேல்முருகன் எனது தாயாரை 2 முறை சந்தித்து என்னை பெண் கேட்டார்.
அப்போது எனது தாயார் என்னை வேல்முருகனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு நானும், வேல்முருகனும் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். பின்னர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். இந்த நிலையில் எனது தாயார் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்.
எனவே கடந்த மாதம் 20–ந் தேதி எனது கணவர் வேல்முருகனுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். 3 நாட்கள் ஊர் ஊராக பஸ்சில் சுற்றித்திரிந்தோம்.
அதன் பின்னர் 23–ந் தேதி கோவை வந்தோம். பேரூரில் எனது கணவரின் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். அதன் பின்னர் மருதமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள் கோவையில் இருப்பதை தெரிந்து கொண்டு மிரட்டுகிறார்கள். எங்கு பார்த்தாலும் எங்களை கொலை செய்து விடுவதாக கூறுகிறார்கள்.
அறந்தாங்கியில் எனது கணவர் குடும்பத்தினர் மீதும் வேண்டும் என்றே புகார் கொடுத்துள்ளனர். எங்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம்.
மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘அலைபாயுதே’ சினிமாவில் காதல் ஜோடி திருமணம் செய்த பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்று விடுவார்கள்.
அதேபாணியில் நிவேதா–வேல்முருகன் பதிவுத் திருமணத்துக்குப் பின்னர் பிரிந்து இருந்தனர். தங்களுக்கு நெருக்கடி வரவே வீட்டைவிட்டு வெளியேறி ‘காதல்’ சினிமா பாணியில் பஸ்சில் 3 நாட்களாக ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள்.
Average Rating