திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் ரூ.10 லட்சம் நெய் டின்கள் திருட்டு!!
திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தினமும் பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் தயார் செய்யப்படுகிறது.
இதற்காக சுமார் 50 நெய் டின்கள் தினமும் செலவழிக்கப்படும். லட்டு தயாரிக்க தேவையான நெய் டின்கள் திருமலை தேவஸ்தான அலுவலக குடோன்களில் இருந்து திருச்சானூருக்கு வேனில் கொண்டு வரப்படும்.
இந்த பணிகளை கவனித்து வரும் தேவஸ்தான கணக்கு அதிகாரி கடந்த சில நாட்களாக விடுமுறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று உதவி அலுவலர்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆகியோர், திருச்சானூர் கோவிலில் லட்டு தயாரிக்கும் அறை மற்றும் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை மற்றும் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் டின்களில் 110 நெய் டின்கள் திருடுபோயிருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து லட்டு தயாரிக்கும் கூடத்தில் உள்ளவர்கள் மற்றும் நெய் டின்களை வாகனங்களில் கொண்டு வருபவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். தேவஸ்தான உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
Average Rating