கல்லூரி பேராசிரியையை கடத்தி சென்ற வாலிபர்: போலீஸ்காரர் மனைவியை ஏமாற்றியதும் அம்பலம்!!
தக்கலையை அடுத்த கீழ கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் பேசி நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்தனர்.
கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. அதற்கு முந்தைய நாள் திடீரென பேராசிரியை மாயமாகி விட்டார்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் தக்கலை போலீசில் புகார் செய்தனர்.
அங்கு புகார் கொடுத்த பின்பு மகள் கண்டுபிடிக்கப்பட்டாரா? என்பதை அறிய அவரின் தந்தை அடுத்த நாள் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது கொற்றியோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் வந்து பேராசிரியையின் தந்தையை வழி மறித்தார்.
அவரிடம் பேராசிரியை மாயமானது பற்றி எனக்கு தெரியும். அவரை தக்கலை கொல்லன்விளை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று உள்ளார் என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:–
அந்த வாலிபரை சிறு வயது முதல் எனக்கு தெரியும். இருவரும் படிக்கும் காலத்திலேயே காதலித்தோம். இது தெரிந்ததும், பெற்றோர் என்னை போலீஸ்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர். காதலனை மறந்து போலீஸ்காரருடன் வாழ்ந்து வந்தேன்.
எனது இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட வாலிபர் மீண்டும் என்னை தொடர்பு கொண்டார். ஏற்கனவே காதலித்தவர் என்பதால் அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் நானும் அவரிடம் வீழ்ந்தேன்.
இது போலீஸ்காரர் கணவருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். இதை வாலிபரிடம் கூறியதும் அவர், என்னை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று வட்டம் பகுதியில் தனி வீடு எடுத்து தங்க வைத்தார். அங்கு அடிக்கடி வந்து சென்றார். அவர்தான் உலகம் என நம்பி இருந்தேன்.
இந்த நிலையில்தான் அவர் பேராசிரியையை சந்தித்து அவரை தன் வலையில் வீழ்த்திவிட்டார். இப்போது என்னை கைவிட்டு அவரை அழைத்துச் சென்றுவிட்டார். பேராசிரியையின் தொடர்பு கசந்ததும் அவரையும் கழட்டி விட்டு விடுவார்.
எனவே நீங்கள்தான் உங்கள் மகளை உஷார்படுத்தி காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த பெண் கூறினார்.
தலைசுற்ற வைக்கும் இந்த கதையை கேட்டு கலங்கிப்போன பேராசிரியையின் தந்தை, அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு தக்கலை போலீஸ் நிலையம் சென்று மீண்டும் ஒரு புகார் கொடுத்தார்.
அதன் பேரில் தக்கலை போலீசார், பேராசிரியையை கடத்திச் சென்ற வாலிபரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் வரவழைத்தனர். அவருடன் பேராசிரியையும் வந்தார். இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, பேராசிரியை பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி, பேராசிரியையை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்து வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
பிரச்சினை முடிந்தது என்று எண்ணி இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வீட்டில் இருந்து பேராசிரியை மாயமாகிவிட்டார். இம்முறையும் பேராசிரியையை அதே வாலிபரே அழைத்து சென்றிருப்பது தெரிய வந்தது.
போலீசார் எப்படியும் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என்பதால் அந்த வாலிபர் நேற்று காலையிலேயே தக்கலை போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பேராசிரியை, தன்னுடன் இருப்பதாகவும், அவரை கோவிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி கொண்டதாகவும், மாலையில் போலீஸ் நிலையத்தில் ஆஜராவதாகவும் கூறினார். அவரது பேச்சை நம்பி போலீசார் பேராசிரியையின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்தனர்.
ஆனால் வருவேன் என்ற வாலிபர் இரவு வரை வரவில்லை. இதனால் காத்திருந்த போலீசாரும், பேராசிரியையின் பெற்றோரும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Average Rating