மீன் வியாபாரி கொலை: மனைவி–கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!!
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வலிவலம் சிங்கமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மீன் வியாபாரி.
இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் வலிவலம் அருகே உள்ள சாட்டியக்குடியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சுமதிக்கு கீழ வெண்மணியில் மைக் செட் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் பாலமுருகனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இந்த விவரம் வேல்முருகனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேல் முருகன் அங்குள்ள எடையாற்றில் பிணமாக கிடந்தார்.
அவரது கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சுமதி தூண்டுதலின் பேரில் அவரது கள்ளக்காதலன் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் கீழ வெண்மணியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனை கொன்று ஆற்றில் வீசி சென்றது தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்யுமாறு பாலமுருகனிடம் சுமதி கூறி உள்ளார்.
இதையடுத்து வேல்முருகனை போனில் தொடர்பு கொண்டு மீன் விற்பனை செய்ய பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக கூறி உள்ளார். அதன்படி அவர் அங்கு சென்றுள்ளார்.
பின்னர் 3 பேரும் மது வாங்கி கொண்டு இரிஞ்சூர்–அணக்குடி சாலைக்கு சென்றுள்ளனர். அங்கு பாலமுருகன் மைக் செட் கட்ட வைத்திருந்த கயிற்றால் வேல் முருகன் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் பிணத்தை எடுத்து சென்று எடையாற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் சுமதியை தொடர்பு கொண்ட பாலமுருகன் கணவரை தீர்த்து கட்டி விட்டோம். போலீசில் அவரை காணவில்லை என புகார் கொடுக்குமாறு கூறி உள்ளார்.
போலீசார் உடலை கண்டு பிடித்தால் அழுது நடிக்கும் படியும் கூறி இருக்கிறார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Average Rating