குன்னூரில் பட்டப்பகலில் கடையில் 25 பவுன் நகை திருடிய பெண் கைது!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் மகேலால். இவரது கடைக்கு சம்பவத்தன்று 4 பெண்கள் நகை வாங்க வந்தனர். அவர்களுக்கு மகேலால் நகைகளை காண்பித்தார். நீண்ட நேரம் நகைகளை காண்பித்தும் அவர்களுக்கு நகைகள் பிடிக்கவில்லை என்று சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பின்னர் நகைகளை மகேலால் சரிபார்த்தார். அப்போது மோதிரம், செயின் உள்பட 25 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேலால் அந்த பெண்களை தேடினார். ஆனால் அவர்கள் மாயமாகிவிட்டனர்.
இதுகுறித்து குன்னூர் போலீசில் மகேலால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேலால் நகை கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நகை திருடிச் சென்ற பெண்களின் உருவம் பதிவாகியிருந்தது.
அதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு பெண்ணின் அடையாளம் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் பகுதியில் சமையல் வேலை பார்த்து வரும் கோமதி என்று தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கும், இந்த திருட்டுக்கும் தொடர்பு இல்லை. என்னுடன் வந்த அடையாளம் தெரியாத பெண் தான் நகைகளை திருடியதாக முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating