தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!
தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்கா நகர் ஏ.கே.எல். காலனியில் வசித்து வரும் ராமு மகன் செல்வகுமார் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் ராமுவை தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டின் முன்பு உள்ள சுவற்றில் அவரது தலையை மோதி அடித்து உதைத்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை வீட்டு வாசல் முன்பு இழுத்து போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து செல்வகுமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தனது மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட செல்வகுமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இதுகுறித்து செல்வகுமாரின் தந்தை ராமு தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வகுமார் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தகராறு வந்ததாகவும், அவர் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் தந்தை உதயசங்கர் வயது (42). செல்வகுமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் உதயசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலை எதற்காக நடந்தது என்பது தெரியவரும்.
Average Rating