காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் ஓட ஓட விரட்டி பத்திர எழுத்தர் படுகொலை!!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). இவரது மனைவி கலை செல்வி. சிவபெருமாள் தனது குடும்பத்தினருடன் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மேலும் பத்திர எழுத்தரான சிவபெருமாள் காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் அலுவலகமும் வைத்து நடத்தி வந்தார்.
இன்று அவர் தனது மனைவியுடன் அலுவலகத்துக்கு வந்து பணிகளை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபெருமாளை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையில் இருந்து வெளியேறி தப்பியோடினார்.
இருப்பினும் அந்த வாலிபர்கள் சிவபெருமாளை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். சிவபெருமாள் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவபெருமாள் இறந்தார்.
பஸ் நிலையத்தில் வைத்து பட்டப்பகலில் மனைவி கண் முன்பே பத்திர எழுத்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிவபெருமாளை கொன்ற வாலிபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி அருகே டாஸ்மாக் ஊழியர் அய்யப்பன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் தற்போது கொலை செய்யப்பட்ட சிவபெருமாளுக்கு உறவினர் ஆவார். இதனால் இந்த விவகாரத்தில் பழிக்குப்பழியாக கொலை சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating