அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட 6 பேர் மாயம்: போலீசார் விசாரணை!!
சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சிந்துபாரதி (19).
இவர் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி தையல் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்க குன்றத்தூர் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
அம்பத்தூர் பானுநகர் 27–வது அவென்யூவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பிரியதர்சினி (19). இவர் கடந்த 9–ந்தேதி காலையில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அம்பத்தூர் லெனின்நகர் 9–வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சண்முகபிரியா (19). இவர் கடந்த 24–ந்தேதி காலையில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சீனிவாசா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் வாணி (19). இவர் கடந்த 1–ந்தேதி காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பவில்லை.
அம்பத்தூர் சண்முகபுரம் பாரதிதாசன் நகர் 16–வது தெருவை சேர்ந்தவர் வில்வநாதன். இவரது மனைவி ஆனந்தி (26). இவர் கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி வேலூரியில் உள்ள தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. அவர் தனது தந்தை வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் திடீரென்று மாயமாகி விட்டார்.
அம்பத்தூர் அழகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன் (64). இவர் கடந்த மாதம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கோ மாயமாகி விட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவிகள், பெண்கள், முதியவர் என 6 பேர் மாயமாகி உள்ள சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating