நாகர்கோவிலில் பெட்ரோல் குண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள் கைது!!
ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில், பெட்ரோல் குண்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அதை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரையும் கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோட்டார் போலீசாரும், தனிப்படை போலீசாரும் பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 28), மாரியப்பன் (28), நம்பியுடையன் (28) என்பது தெரியவந்தது.
பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:–
மணிகண்டன் நாகர்கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள லாரி ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். அப்போது லாரி டிரைவருக்கும் இவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை மணிகண்டன் எங்களிடம் கூறினார்.
நாங்கள் லாரி டிரைவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பெட்ரோல் குண்டுகளுடன் வந்தோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிடிபட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாரியப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. நம்பியுடையன் அங்குள்ள புரோட்டா கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
Average Rating