ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன்: உ.பி.யில் தொடரும் சர்ச்சை!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் 27 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மோசமான கருத்தடை சிகிச்சைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இப்போது சண்டவ்லி மாவட்டத்தில் போதிய மருத்துவ உபகரணங்கள் ஏதுமின்றி ஒரே மணி நேரத்தில் 27 பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை ஆபரேஷன் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புறம் அவசர அவசரமாக செய்யப்பட்ட இந்த ஆபரேஷனால் பெண்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரேஷன் முடிந்து மயக்க நிலையில் உள்ள பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் என்கே சிங் கூறுகையில், “நியாம்தாபாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த இந்த சர்ச்சைக்குரிய கருத்தடை ஆபரேஷன் குறித்து விசாரணை நடத்த தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
ஆனால், இதை மறுத்துள்ள தலைமை சுகாதார அதிகாரி, 2 மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ததாகவும் கருத்தடை சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் படுக்கை வசதிகள் மட்டுமே போதிய அளவில் இல்லை என்றும் சமாளித்துள்ளார்.
Average Rating