அரசு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் நிர்பயா ஆவணப்படம் யூடியூபில் நீடிப்பு!!
டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் சற்று முன் வரை அந்த வீடியோ யூ டியூப் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை.
இளம்பெண் நிர்பயா கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். இந்தியாவின் மகள் ஆவணப்படத்துக்காக எடுத்த இப்பேட்டியை பி.பி.சி. தொலைக்காட்சி நேற்று பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் ஒளிபரப்பியது. ஆனால் இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை தொலைக்காட்சி மற்றும் இண்டர்நெட்டில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று மாலை வரை அந்த வீடியோ யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்படவில்லை.
இதுகுறித்து யூ டியூப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “யூ டியூப் மக்களின் பலதரப்பட்ட எண்ணங்களை வீடியோ வடிவில் வெளிப்படுத்துவதற்காக இயங்கி வரும் தளம். அதில் இடம்பெறும் வீடியோ சட்டத்திற்கு புறம்பானதாகவோ சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகவோ இருந்தால் நாங்கள் அந்த வீடியோவை நீக்குவோம்” என்றார்.
இதுவரை அரசிடமிருந்து வீடியோவை நீக்கச் சொல்லி உத்தரவு எதுவும் வந்ததா இல்லையா என்ற கேள்விக்கு உறுதியான பதிலளிக்க யூ டியூப் தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating