ரூ.15 லட்சம் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்: 2 பேர் கைது!!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வம். கிறிஸ்தவ மத போதகர்.
இவர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு செம்மேட்டுபட்டியை சேர்ந்த கோகிலவாணன் (வயது 42) திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆண்டனி சிங்கராயர் (40) ஆகியோரிடம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றார்.
இதனை நம்பிய கோகிலவாணனும், ஆண்டனி சிங்கராயரும் ரூ.15 லட்சத்தை அவரிடம் கொடுத்தனர். ஆனால் கிறிஸ்தவ போதகர் அருள்செல்வம் அந்த பணத்தை பெற்று கொண்ட பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
அவர்களுக்கு வெளிநாடு நிதி எதுவும் பெற்று தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த 2 பேரும் போதகர் மீது கடும் ஆத்திரம் கொண்டனர். அவரை பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் கோகிலவாணன், சில தினங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் போதகர் அருள்செல்வம் இருப்பிடத்தை அறிந்தார். போன் மூலம் தொடர்பு கொண்டு தனது ஊருக்கு ஜெபம் நடத்த வருமாறு அழைத்தார். இந்த தகவலை நண்பர் ஆண்டனி சிங்கராயருக்கும் தெரிவித்தார்.
இருவரும் செம்மேட்டுபட்டியில் தயாராக இருந்தனர். அப்போது அங்கு வந்த கிறிஸ்தவ போதகர் அருள் செல்வம் அவர்களிடம் சிக்கி கொண்டார். ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் போதகரை அடித்து உதைத்து பணம் கொடுத்ததற்கு எழுதி வாங்கினர். பின்னர் போதகரின் உறவினரிடம் பேசி பணத்தை கொடுக்குமாறு கேட்டனர்.
போதகரின் உறவினர்கள் இதுகுறித்து விருவீடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டனி சிங்கராயர், கோகிலவாணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Average Rating