இஸ்ரேலுக்கு பாலஸ்தீன தீவிரவாதிகள் கெடு
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள பாலஸ்தீன கைதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்குள் விடுதலை செய்யவேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ராணுவப்பிரிவு கெடு விதித்து உள்ளது. பாலஸ்தீனப் பெண்கள், இளைஞர்கள் என ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுதலை செய்வதற்காக இஸ்ரேல் ராணுவவீரர் கிலாத் ஷாலிட்டை பாலஸ்தீனத்தீவிரவாதிகள் கடத்தி வைத்து இருக்கின்றனர். அவரை மீட்பதற்காக இஸ்ரேல் ராணுவம் காசா நகருக்குள் புகுந்தது. பிரதமர் அலுவலகத்தின் மீது ஏவுகணைகளை வீசித்தாக்கியது.
இந்த நிலையில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் ராணுவப்பிரிவு மற்றும் 2 தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு கெடு விதித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குள் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும். எங்களின் மனிதாபிமான கோரிக்கைக்கு எதிரி இணங்காவிட்டால் இந்தப்பிரச்சினையை முடிந்துபோன ஒன்றாக நாங்கள் கருதுவோம். அதன்பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு எதிரிகள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று தீவிரவாதிகள் கூறிஉள்ளனர்.
இதற்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கைகளில் முதல் கட்டமாக சிறையில் உள்ள பெண்களையும், இளைஞர்களையும் விடுதலை செய்தால் ராணுவ வீரர் கிலாட் பற்றிய தகவல்களை வெளியிடுவோம் என்று கூறி இருந்தனர்.
தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு ஒருபோதும் பணியமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மர்ட் கூறி இருக்கிறார்.